மரண அங்கிகளும் அம்மண உடல்களும்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம் நடைபெறுவதால் அதை ஒட்டிய வழக்கமான பின்னோட்டம் இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது.

இந்த விவாதம் டிபிசிடியிடம் துவங்கி சுந்தர் மற்றும் கல்வெட்டுவிடம் வளர்ந்து பாரி.அரசுவிடம் தொடர்கிறது.  பல பதிவர்களும் இதனை பலவிதமாக பேசி உள்ளனர் என்றாலும் பாரி. அரசுவின் பதிவு-2 ஐ முன்வைத்து எனது கருத்துக்கள் இங்கு. இது உரையாடலுக்கான எனது கருத்துக்களே தவிர நண்பர்களுடன் ஆன விவாதம் அல்ல.

//பெண்ணியத்திற்குப் போராடுவதாக ஜல்லியடிப்பது//
ஏன் இந்த கொலைவெறி? :)))) 

உடைகளைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் பேசத் துவங்கினால் கண்டிப்பாக பெண்ணியம் பற்றி பேசியே ஆக வேண்டும். காரணம் பண்பாடு என்பது பெண் உடல் தைக்கப்பட்ட சமூகம் பற்றிய பேச்சுதான். 

தமிழில் பண்பாடு என்கிற வார்த்தை சமீபத்தியது அதாவது 75 சிவத்தம்பி ஆண்டுகால கண்டுபிடிப்புத்தான் என்றும் பழந்தமிழக்த்தில் இன்று நாம் கூறும் பண்பாடு போன்ற பொருளில் தமிழில் திருவள்ளுவர் பயன்படுத்திய “சால்பு“ என்கிற பழஞ்சொல் புழுங்கியதைப் பற்றியும் தமிழ் பண்பாடு குறித்தும் தமிழை உலக ஆய்வுப் புலத்திற்குள் வைத்து பார்க்கும் ஆய்வாளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் - மேற்குலகின் பங்கும் பணியும்” என்கிற நூல் சுருக்கமாகப் பேசுகிறது.  பண்பாடு என்பது மேற்குலகம் எழுதிய வரலாற்றின் மீள்கண்டுபிடிப்புடன் புழக்கத்திற்கு வந்த ஒன்று.  இதன் பொருள் பண்டைய சமூகம் என்பது தனது பண்பாட்டுக் கூறுகளை தனது இருத்தலுடன் உறவுகொண்டே புழங்கி வந்தது என்பதுதான். ஒரு மக்கள் கூட்டம் கணக்குழுவிலிருந்து (clan) இனக்குழுவாக (race) மாற இப்பண்பாட்டு ஒழுங்கமைப்பு என்பது அடிப்படையாக உள்ளது.

//கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.//

பண்பாடு குறித்து ஏற்கனவே எனது பதிவில் விளக்கியுள்ளேன்.
”கலாச்சாரம் (பண்பாடு என்பது நல்ல தமிழ்ச்சொல்) என்பது ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழியாகும். அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும்? எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்காக துன்பம் அடைய வேண்டும்? என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்காணிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் விழைவுகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.” 

நீங்கள் கூறும் பண்பாடு என்பது உள்ளிருந்து உருவாகுவதில்லை அல்லது அடையாளப்படுத்தப்படுவதில்லை.. அது மற்றக் குழுக்களுடன் ஆன இயக்கத்தில் உறவில் வேறுபாட்டில் கட்டமைந்து இறுகுகிறது என்பது ஒரு முக்கிய விடயமாகும். காரணம் பண்பாடு என்பது மற்ற குழுவினராலேயே அர்த்தப்படுத்தப்படுகிறது. அர்த்தம் என்பதே பிறாரால் மட்டுமெ சாத்தியம். அல்லது பிறர் பற்றிய உணர்வின் வழியாக மட்டுமே சாத்தியம்.  ஒரு குழு தனது பண்பாட்டை புரிந்துகொள்ள அதனை வேறுபடுத்தி அர்த்தமாக்கும் பிறிதொரு குழு தேவை. அவ்வகையில் பண்பாடு என்பது பிற குழு ஒப்பிடல் இல்லாமல் சாத்தியமி்ல்லை. அதேநேரத்தில்  பிற குழுக்களினை ஒப்பிட்டு உயர்ந்தது தாழ்ந்தது என்பது ”பண்பாட்டு அரசியலாக” வடிவெடுக்கிறது. 

//அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.//

பண்பாடு என்பது வரலாற்று வகைத்திணை மட்டுமல்ல அது ஒரு அரசியல் வகைத்திணையுமாகும். உண்மையில் பண்பாட்டிற்குள்தான் மனித உடல் நடப்பட்டுள்ளது. இயல் உடலை பண்பாட்டு உடலாக மாற்றாமல் எந்த குழுவும், அரசும், சமூகமும் உருவாகியிருக்க முடியாது. புதிய அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப இவ்வரையறைகள் மறுவரை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது ஒரு உடல்- அங்கங்களற்ற உடல்களான (body without organ)  மண்ணுடன், நிலத்துடன், குழுவுடன், சமூகத்துடன், குடும்பத்துடன் மற்றும் மதத்துடன் இணைப்பதன் வழியாக உடலை நிலமயமாக்கலில் (territorialization) உருவாகி கட்டமைவதாகும்.   ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நிலமயமாக்கல் என்பது புதிய குழுவின் பண்பாட்டால் நிலத்தகர்ப்பு (deterritorialization)செய்யப்பட்டு அப்புதியக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளால் மறுநிலமாக்கல் (reterritorialization) செய்யப்படுகிறது. ஆங்கிலேயக் காலனி என்பது இந்திய பண்பாட்டை இவ்வாறாகத்தான் மறு கட்டமைப்பு செய்தது.  ஆங்கிலேயக் காலனியின் பார்வைப்புலம் இல்லாத இந்தியப் பண்பாடு என்பது சாத்தியமற்றதாக இருப்பதை உணரலாம்.  தமிழ் பண்பாட்டு புலத்தில் நிகழ்ந்த காலனிய பாதிப்புகள் பற்றி மேற்கண்ட சிவத்தம்பியின் குறுநூல் விவாதிக்கிறது.

//நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(//

ஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும். அதனால்தான் பெண் என்கிற கருத்துருவத்தை மையமாகவும் அவளது உடலை விளிம்பிலும் வைத்து ஒடுக்குகிறது ஆணியம்.  ஒருபடிக்கு மேலாக பெண்ணை தெய்வநிலைக்கு கொண்டு சென்று இயக்கமற்றவளாக புணிதப்படுத்தி ”மென்மையாக” ஒடுக்கி வைக்கிறது.  இன்றைய பண்பாடு என்பது ஆணியம் கட்டமைத்த ஒன்று.  இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணியம்தான் பண்பாடு என்கிற தொழில் நுட்பத்தையே வரலாற்றின் வகைத் திணையாகக் கண்டுபிடித்து அது குறித்து ஆய்வுகள் மற்றும் பேச்சுகளை பெருக்கி உள்ளது.  கருத்துருவ நிலையில் பெண் இயற்கை என்றால் ஆண் பண்பாடாக உள்ளான். அதனால்தான் ஆண் எல்லா சமூகங்கிளலும் கலாச்சாரக் காவலனாக உள்ளான்.  பெண்ணுக்கு ஆணால் கையளிக்கப்பட்டிருப்பத அதீத பாலியல் வேட்கைக்கொண்ட பேய்நிலை அல்லது பாலியை முற்றிலுமாக ஒடுக்கிய தெய்விநிலைதான். இது குறித்து புதமைப்பித்தனின் காஞ்சனைப்பற்றிய எனது பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சான்றாக தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். அகம்Xபுறம் என்கிற சங்கக்காலப் பிரிவு நமது பண்பாட்டின் ஒரு உயர்ந்த மாண்பாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரிவினை வழியாக உடல் உற்பத்தி (காதல் - காமம் - அகம் - பெண்மை-பெண் உடல்) என்பதும் உடல் வலிமை அல்லது காப்பது (வீரம்-போர்-புறம்-ஆண்மை-ஆண்உடல்) என்பதாக குறியிடப்படுகிறது. “விழுப்புண் இல்லாத மார்புகள் பெண்களால் தழுவப்பபடாது“ என்பதன் அடிப்படையில் பெண் காதலைப் பெற போர் என்கிற வீரச்செயலில் ஈடுபடும்படி ஆண் உடல் கட்டமைக்கப் படுகிறது. பொருளாதாரம் எனும் ஆணிரைக் கவர்தல் மற்றும் பாலின்பப் பொருளாக பெண்ணைக் கவர்தல் என்பதற்காகவே போர் என்பது நிகழ்கிறது.  இன உற்பத்தி, இன வலிமை என்கிற இரண்டு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒருவகை உடலரசியல் நிலைகளே அகம் புறம் என்கிற பிரிவினை. இதுதான் தமிழக அரசுமுறை உருவாக்கத்தை காப்பாற்றிய ஒன்று.  இதன்வழிதான் தமிழ்பண்பாடு கட்டப்பட்டுள்ளது.

இன்னும் சங்க இலக்கியங்களில் வரும் “நெய்யனி மயக்கம்“ என்கிற அதி உச்ச கிளர்ச்சி நிலைகள் “கார்னிவல்“ கொண்டாட்டங்கள் பிந்தைய மதப் பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆக, பண்டைய தமிழர்களிடம் இருந்த பெண் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது.   பெண் ஒரு வளமையான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழமாக உழுது பயிர் இட வேண்டிய ஒரு site ஆக மாற்றப்பட்டுவிட்டால். பெண் வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதனைதான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது.

//இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது.//

ஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை  முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலேearlyvichearth510x20_small”விக்டோரியன் பண்பாடு” என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட “கவுனை“ (தமிழ் படுத்த நண்பர் டிபிசீடி கவனிக்கவும்)  அணிவதுதான். இதிலும்கூட இது மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் தன்மையை ஆங்கிலேயப் பெண்கள் பயன்படுத்த துவங்கியதாக வரலாற்றைப் படிக்க முடிகிறது. பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோயை இந்திய பெண்களின் உடலில் பரவவிட்ட ஆங்கிலேயர்களின் கிளர்ச்சி வெள்ளை உடலைவிட கருப்பு உடல் மீதான மிகுக் காமமாக வெளிப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

விக்டோரின் பண்பாடுதான் நிர்வாணமாக (அம்மணமாக அல்ல) இருந்த நமது கடவுள்களை ரவிவர்மா என்கிற ஓவியரைக் கொண்டு khajuraho070 ஆடைகட்டி “அழகு” பார்த்தது.  இவர் இந்துப் பெண் கடவுள்களை தென்னிந்திய பெண்களின் பண்பாட்டை ஒட்டி வரைந்தார்.  இன்றைய உடல் மறைக்கும் உடைகள் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டிற்கு அந்நியமானதே. காமசூத்ரா போன்றவை வெளிப்படுத்தம் பெண் உடல் பற்றிய வேட்கைகள் ஒரு திறந்த பாலியல் செயல் பாட்டிற்கான களத்தைக் கொண்டவை. இன்றைய பாலியல் உயிர்த்தலுக்கானதாக இல்லை. துரிதகதியில் சாவை நோக்கிச் செல்லும் மரணத்தின் உத்திக்கானதாக உள்ளது. முழுமையடைந்த பாலியல், வேட்கைகளை ஏற்படுத்தாது.  பாலியல் வேட்கையே அதன் நிறைவடையாத குறைத் தன்மையால் வருவதுதான்.  பெருக்கப்பட்ட பாலியல்தான் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்து சமூகத்தின் மொத்த உடலையும் அதை நோக்கி திருப்பி விடுகிறது. உடல்சார்ந்த மரணத்திலிருந்து உடல்சார்ந்த உயிர்த்லுக்கு பாலியலை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் உடல் குறித்த இந்த கவர்ச்சி உணர்வுகள் அதன் நுகர்வத் தன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். கவச்சியில் சிக்கிக் கொண்டுவிட்ட நமது புலன்களை அழகியல் நொக்கியதாக திருப்ப வேண்டும். 

//உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.//

பிரச்சனை பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமது mallika ஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணிவிலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது.  உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரொப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழகவிடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம். ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் “தவறான“ நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை. 

இப்பயம் வரக் காரணமான ஊகங்கள் 1. எல்லா ஆண்களும் பெண்களும் எதையும் செய்ய முடியாத இறுக்கமான மனநிலையில் ஒருவகை மனோவியல் வன்முறையில் இருப்பதாக எண்ணுவது. 2. குடும்பம் போன்ற நிறுவனங்கள் சிதைந்து எல்லாம் தனியர்களாக சீரழிந்துவிடுவோம் என்று எண்ணுவது. 3. அதீத பாலியல் நடவடிக்கைகளால் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும் ஒழுங்கு குலைந்துவிடும் என நம்புவது.  4. பாலியல் பற்றிய சிந்தனைதவிர வேற சிந்தனைகளே மனிதருக்குள் இல்லை என்று எண்ணுவது. இவற்றிற்கு எந்த ஆதாரங்களும் அடிப்படைகளும் இல்லை. இவை எல்லாம் மனிதன் மிருக உணர்வு கொண்டவனாக பக்குவப்படாதவனாக உள்ளான் என்கிற ஊக அடிப்படையில் வருவது. அப்படியே இவை நிகழ்ந்தாலும் ஒரு தலைமுறைக்கு மேல் இவை தொடரப் போவதில்லை.   காரணம், மனித உடல் என்பது தான் உயிர் வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பை தானே உருவாக்கிக் கொள்ளும்.  அது இயற்கை சார்ந்த பண்பு.  இதுநாள்வரை, மனிதகுலத்தை கசக்கிப் பிழிந்ததற்காக இந்த ஒரு ”தலைமுறைப் பலியிடலை” புராதன சமூகங்களின் சடங்கான கூட்டுப்பலியிடலாக எண்ணி நிகழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்வது?

//இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!//

பாலியல் தொழிலாளியும், இடுப்பில் அள்ளிச் சொருகப்பட்டவளும் ஒரேவகை பெண்கள்தான்.  அவர்கள் கவர்ச்சியாக அணியலாம் எனது மணைவியோ சகோதரியோ தாயோ கவர்ச்சியாக அணியக்கூடாது என்பதில் நியாயம் இல்லை.  பாலியல் தொழிலாளி அப்படியே வெளிப்படையாக கவர்ச்சிக்காட்டி வருவதில்லை. மேல்தட்டு மற்றும் அதை நகல் செய்யும் நமது பெண்கள்தான் கவர்ச்சி மோகத்தில் உள்ளார்கள். ஆண்சேவல் கொண்டையைத் தூக்கி நடக்குமாம் பெட்டையைக் கவர.. இன்னும் சேவல் பண்ணையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியலின் அழகுணர்ச்சி நுகர்வின் வழியாக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை. காரணம் சரக்குகளின் சுற்று வட்டத்தை நம்பி இயங்கும் உலகும் அதனை விற்பனை செய்யும் முதலாளிகளும் அதற்காக கட்டமைக்கப்படும் நுகர்வுப் பாண்பாடுமே. ஆண்கள் ஏன் கவர்ச்சியாக உடை அணிவதி்ல்லை என்றோ உடைப் பிரச்சனைகள் குறித்து பெண் பதிவர்களோ எழுதுவதே இல்லையே ஏன்?  நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக்கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்..?  

//ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.//

இங்கு சமூக ஒழுங்கு என்பது என்ன? என்பதை வரையறுக்க வேண்டி வரும்.  அதைதான் அவர்களும் செய்கிறார்கள். அவர்களது ஒழுங்கை. அவர்கள் பின்பற்றுகிறார்கள். பிரச்சனை இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும் இயக்கமும் அவசியம் என்பதே.  வரலாற்றில் மதங்கள் செய்து வந்த தையற்காரன் பணியை இன்றைய பண்பாட்டு காவலர்கள் செய்ய முற்படுவதே காரணம். இதன் பொருள் கவர்ச்சியான உடைகள் தேவை என்ற நான் கூறவரவில்லை. அவை கவர்ச்சியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளதுதான் பிரச்சனை. இப் பிரச்னைகள் இன்ற விவாதித்திற்கரியதாக இருப்பதே ஒரு முன்னேற்றம்தான்.  

//குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.

இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.

பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?//

இவை ஆழமான ஆய்விற்கு உரிய கேள்விகள். உங்கள் விவாதம் நுட்பமாக சரியான தளத்தை வந்தடைந்துள்ளது.

இறுதியாக, பாலியல் என்பது பொதுப்பரப்பிலிருந்து தனிப்பரப்பிற்க மாற்றப்பட்டதன் தொடுதல் அரசியல் பற்றிய ஒரு ருசிகரமான நூல் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பெண்கள் எப்படி பாலியல் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு கட்டமைக்கப்பட்டார்கள் என்பதையும் அம்மணம் (nudity) என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதைப்பற்றியும் அங்கிகள் மூலம் அம்மண உடல் என்பது தனியான ரகசிய தளத்திற்கு நகர்த்தப்பட்டது பற்றியும் விவாதிக்கிறதாம் லாரா கோவிங் மற்றும் டேவிட் டர்னர் என்கிற இரண்டு ஆய்வாளர்களின் நூல்கள்.   Laura Gowing. Common Bodies: Women, Touch and Power in Seventeenth-Century England.  David M. Turner. Fashioning Adultery: Gender, Sex and Civility in England, 1660-1740.

மேலதிகமாக இவற்றைத் தொடர இந்நூட்கள் உதவலாம். லாரா கோவிங் நூல் பற்றிய இந்த மதிப்புரையும் படித்து வையுங்கள்.

ஜமாலன்.

16 Comments:

முரளிகண்ணன் said...

பட்டய கிளப்புறீங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல கட்டுரைக்கு நன்றி, ஜமாலன்.

feminism - பெண்ணியம், சரி. male chauvanism - ஆணியமா.? இந்த ஆணியம் என்ற வார்த்தை நிறைய பேர் உபயோகித்து நிலை பெற்று விட்டால், female chauvanism தான் பெண்ணியம் என உருவாகி விடாதா.?

கல்வெட்டு said...

ஜமாலன்,
அனைத்துப் பக்கங்களையும் தொகுத்து உரையாடலை நேர்த்தி செய்தமைக்கு நன்றி!

வலையுலகில் உடல் அரசியல் குறித்து அதிகம் பதிந்தவர் நீங்கள்.

கலாச்சாரம் , இந்தியாவின் சினிமா காமம்- நிஜ வாழ்க்கை காமம் குறித்த இரட்டை நிலைப்பாடுகள், மற்றும் அதிக விசயங்களைப் பற்றி நிச்சயம் விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது.


ஸ்ரேயா போல ஆபாசஉடை பிரச்னையில் சிக்கினார் மல்லிகா ஷெராவத்
http://nirubar.blogspot.com/2008/05/blog-post_02.html

ஒரு காலத்தில் ஸ்ரேயாவிடம் கலாச்சாரத்தை தொலைத்த மக்கள் , மறுபடியும் மல்லிகாவின் கால்களில் தொலைத்து உள்ளார்கள். இதே ஸ்ரேயாக்களும், மல்லிகாக்களும் ஆடும் ஆட்டத்தை தனது குழந்தைகளைக் கொண்டு ஆடவைக்கும் அதே சமுதாயம்தான் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்ணின் தொடைகளுக்குள்ளே துழாவிக் கொண்டு இருக்கிறது இன்னும்.

பைத்தியக்காரன் said...

முதலில் வாழ்த்துகள் ஜமாலன். இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் 'மொழியும் நிலமும்'வலைப்பூ குறித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

விகடனில் அறிமுகம் வந்ததாலேயே நாம் பரவசப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. எழுதப்பட்ட பிரதிகளுக்கான அங்கீகாரம் அவர்கள் மூலம் வருவதுமில்லை. என்றாலும் பெரும் வணிக இதழ்களை மட்டுமே வாசிக்க கிடைத்த தேடலுள்ள வாசகர்கள், இந்த அறிமுகம் வழியே உங்களை நோக்கி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

அப்படி வருபவர்கள் மேலும் மேலும் நகருவதற்கான சூழலை இந்த வலைப் பூவில் உள்ள பிரதிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. அதற்கு உதாரணமாகவே இந்த பிரதியும் அமைந்திருக்கிறது.

நல்ல உரையாடலுக்கான பிரதி ஜமாலன்.

பாரி.அரசு said...

மிக்க நன்றி ஜமாலன்!

நீங்கள் மேற்கோள் தந்திருக்கும் கட்டுரைகளையும், நூற்களையும் வாசித்துவிட்டு வருகிறேன்... இரண்டு நாட்கள் கழித்து...!

ஜமாலன் said...

நன்றி முரளிகண்ணன்.

பட்டய கிளப்ர்றீங்க....???? வாழ்த்தா வஞ்சகப் புகழ்ச்சியா? :)

ஜமாலன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

//நல்ல கட்டுரைக்கு நன்றி, ஜமாலன்.//

நன்றி சுந்தர்.

//feminism - பெண்ணியம், சரி. male chauvanism - ஆணியமா.? இந்த ஆணியம் என்ற வார்த்தை நிறைய பேர் உபயோகித்து நிலை பெற்று விட்டால், female chauvanism தான் பெண்ணியம் என உருவாகி விடாதா.?//

ஆணியம் என்பதை male chauvanism என்கிற பொருளில் நான் கையாளவில்லை. ஆண்மையவாதம் என்கிற பொருளிலேயே இதனை பயன் படுத்தினேன். Masculism என்று ஒன்று உள்ளது. அது பெமினிஸத்திற்கு எதிரானது அல்ல. அது ஆண்களை பாதுகாப்பது சம்பந்தமான ஒரு இயக்கம். இங்கு ஆணியம் என்பது சரியான பொருளில் லிங்கமையவாதத்தையே குறிக்கிறது. அதாவது ஆண்குறிமையவாதம் அல்லது தந்தைவழி அதிகாரம் அல்லது விறைப்பில் இறுகிப்போன எல்லா அதிகாரங்களையும் குறிக்கும்.

ஜமாலன் said...

நன்றி நண்பர் கல்வெட்டுக்கு.

//ஒரு காலத்தில் ஸ்ரேயாவிடம் கலாச்சாரத்தை தொலைத்த மக்கள் , மறுபடியும் மல்லிகாவின் கால்களில் தொலைத்து உள்ளார்கள். இதே ஸ்ரேயாக்களும், மல்லிகாக்களும் ஆடும் ஆட்டத்தை தனது குழந்தைகளைக் கொண்டு ஆடவைக்கும் அதே சமுதாயம்தான் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்ணின் தொடைகளுக்குள்ளே துழாவிக் கொண்டு இருக்கிறது இன்னும்.)//

சாட்டையடி வரிகள். அருமை.

ஜமாலன் said...

பைத்தியக்காரன் said...

//முதலில் வாழ்த்துகள் ஜமாலன். இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் 'மொழியும் நிலமும்'வலைப்பூ குறித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள்.//

தகவலுக்கு நன்றி. இப்படி தமிழகத்திலிருந்து உங்களைப்போன்ற நண்பர்கள் சொன்னால்தான் தெரியும்.

//விகடனில் அறிமுகம் வந்ததாலேயே நாம் பரவசப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. எழுதப்பட்ட பிரதிகளுக்கான அங்கீகாரம் அவர்கள் மூலம் வருவதுமில்லை. என்றாலும் பெரும் வணிக இதழ்களை மட்டுமே வாசிக்க கிடைத்த தேடலுள்ள வாசகர்கள், இந்த அறிமுகம் வழியே உங்களை நோக்கி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.//

உண்மைதான். உடலரசியல் பதிவின் படிப்பவர் எண்ணிக்கை வழக்கத்தைவிட இப்பதிவிற்கு சற்று அதிகமாகித்தான் உள்ளது.

//அப்படி வருபவர்கள் மேலும் மேலும் நகருவதற்கான சூழலை இந்த வலைப் பூவில் உள்ள பிரதிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. அதற்கு உதாரணமாகவே இந்த பிரதியும் அமைந்திருக்கிறது.

நல்ல உரையாடலுக்கான பிரதி ஜமாலன்//

கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி.

ஜமாலன் said...

பாரி.அரசு said...

//மிக்க நன்றி ஜமாலன்!

நீங்கள் மேற்கோள் தந்திருக்கும் கட்டுரைகளையும், நூற்களையும் வாசித்துவிட்டு வருகிறேன்... இரண்டு நாட்கள் கழித்து...!//

வாசிப்பது பார்வையை பரந்த தளத்தில் அதிகப்படுத்தும். உங்கள் கருத்துக்களின் மேல் விளக்கமாகவே இப்திவு உரையாடலை மேற்கொண்டு செல்ல.

நன்றி.

TBCD said...

நல்ல கட்டுரை ஜமாலன் ஐயா.

பழங்கால சிலைகள் ஆடை அணியாமல் இருப்பதும், தற்கால சிமிண்ட் சிலைகள் சேலை கட்டி, ஜாக்கெட் போட்டியிருப்பது, அந்தந்தக் காலத்திய பழக்கத்தை காட்டுகிறது.

எவ்வளவு தான் பெண்ணியத்தை ஆதரித்தாலும், தன் மூக்கிற்கு வராத வரை ஆண் கவலைப்படுவதில்லை. மூக்கின் அருகே வந்துவிட்டால், வேர்த்து, விறுவிறுத்து, அடக்குமூறையயை ஆரம்பிக்கிறான்.

நல்ல கட்டுரை....

உடல் கவர்ச்சியில் பார்க்காமல், அழகியில் கூறுகளுடன் பார்ப்பது எப்படி...? பு த செ வி :)))))))

ஜமாலன் said...

நன்றி டிபிசீடி ஐயா!

கவர்ச்சி என்பது ஈர்ப்பையும் அதனால் உருவாகும் நுகர்வுக்கான வேட்கையுயும் அடிப்படையாகக் கொண்டது. அழுகியல் என்பது பகிர்தலையும் அதனால் ஏற்படும் ஒருவருக்குள் ஒருவர் ஊடுறுவலுக்கான வேட்கையையும் அடிப்படையாகக் கொண்டது. கவர்ச்சி ஆதிக்கம். அழகியல் சமத்துவம். ஒரு உடலை நுகரப் போகிறோமா? அல்லது பகிரப் போகிறோமா? என்பதுதான் கேள்வி.

டி.அருள் எழிலன் said...

மிக ஆழமாக ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.ஒழுக்கத்தின் பேராலும் கலாசாரத்தின் பேராலும் சொல்லப்பட்டவைகளிம் மையக் குறி பெண்தான்.மேல் சாவனிசம் ஆண்மை வாதம் இந்த இரண்டின் அடையாளமே ஆண் குறீதான்.நாம் மக்களின் பொதுப்புத்திகளின் சொல்லாடலகளிலேயே அது பொதிந்திருக்கிறது.பெரியார் சொன்ன ஆண்மை நீக்கம் என்பது ஆண் சொத்து உரிமை அழிதலையே சொல்லியிருபபர் என நினைக்கிறேன்.ஆக ஆக ஆண் குறியின் வேர் குடும்பச் சொத்துரிமையில் இருக்கிறது.உங்கள் கட்டுரை கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது நன்றீ ஜமாலன்.

ஜமாலன் said...

நன்றி அருள் எழிலன்.

தாமதமான நன்றி... மறந்தே போனது.

//மேல் சாவனிசம் ஆண்மை வாதம் இந்த இரண்டின் அடையாளமே ஆண் குறீதான்.நாம் மக்களின் பொதுப்புத்திகளின் சொல்லாடலகளிலேயே அது பொதிந்திருக்கிறது.பெரியார் சொன்ன ஆண்மை நீக்கம் என்பது ஆண் சொத்து உரிமை அழிதலையே சொல்லியிருபபர் என நினைக்கிறேன்.ஆக ஆக ஆண் குறியின் வேர் குடும்பச் சொத்துரிமையில் இருக்கிறது//

அருமையான கருத்தைச் சொன்னீர்கள்.

sukirtha said...

கலாச்சாரம் பண்படென்ற கற்பிதமான ஒரு மாயையில் ஒரு உயிரற்ற ஜடமாக பெண்ணுடல்தான் முன்நிறுத்தப்படுகிறது

//ஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும்//

உண்மை .

//ஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை  முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலேய ”விக்டோரியன் பண்பாடு” என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட “கவுனை“ (தமிழ் படுத்த நண்பர் டிபிசீடி கவனிக்கவும்)  அணிவதுதான். இதிலும்கூட இது மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் தன்மையை ஆங்கிலேயப் பெண்கள் பயன்படுத்த துவங்கியதாக வரலாற்றைப் படிக்க முடிகிறது//
இது பலருக்கு தெரிவதில்லை எம் பெண்கள் உடல் தெரிய மேற்கத்தைய நாகரிக உடைகளை அணிவதாக ஆண்கள் கூச்சல் போடுகிரார்கள், எமது பழய கோயிலிலுள் சிலைகளிலேயே பெண்கள் தமது உடல்கலை முழுதாக மறைத்துதிரியவில்லை என்பதை பார்க்க முடிகிறது என நினைக்கிறேன் .வாழ்த்துக்கள் ஜமாலன் பெண்ணுடல் பற்றிய ஒரு தெளிவான பார்வையை இப்படியான கலந்துரையாடல்கள் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்

ஜமாலன் said...

நன்றி சுகிர்தா...

எனது தோழியர் ஒருவர் கேட்டார்.. உடலரசியல் பற்றிய இந்த பதிவுகளுக்கு ஏன் பெண்கள் பின்னோட்டம் போடுவதில்லை.. ஆண்களாக சேர்ந்து அடித்த துரத்திவிட்டீர்களா என்று.. பரவாயில்லை நீங்களாவது அந்த பேரை நீக்கம் வண்ணம் இதை புரிந்து எழதும்போது தெம்பாக உள்ளது.

நன்றி. நீண்ட பின்னொட்டத்திற்கு.