15-ஆண்டுகளுக்கு முன்பு எழுதி மேலும் இதழில் வெளிவந்த இக்கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது.
"பெண்ணியம் ஒரு பார்வை"- என்கிற டாக்டர் அ.சாந்தா அவர்களின்
கட்டுரையில் (தினமணி-27.04.93, பகுதி: சிந்திக்கும் வேளையில் : பெண்கள்) - 'பெண்ணியம்' பற்றிய உரையாடல்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 1. மொழியும், எழுத்துமே பெண்ணை அடிமையாக்கிய முதற்செயற்பாடு, 2. பெண் அடிமைத்தனத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு.
நவீன கருத்துக்களைத் தொட்டு பெண்ணியம் பற்றிய ஒரு புதிய உரையாடலை துவங்கியுள்ள டாக்டர் அ.சாந்தா - கவனத்திற்குரியவராகிறார். மேற்குறித்த இரண்டு கருத்துக்களும் விரிந்த மற்றும் ஆழ்ந்த அவதானிப்புகளுக்கு உரியவை என்பதில் அவருக்கும் கூட மறுப்பு இருக்கப் போவதில்லை. ஆனபோதிலும் இவை குறுக்கப்பட்ட நிலையில் கையாளப்பட்டிருப்பதே கவனத்திற்குரிய புள்ளிகளாகிறது. மொழியும், எழுத்துமே - பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியதாக சுட்டப்படுகிறது. இங்கு மொழிக்கும் சமூகத்திற்கும் இடையிலான வினையை விட்டுவிட்டு அவர் கூறும் காரணங்களை பார்க்கலாம். பழைய சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளிட்ட இன்னபிற கருத்துக்கள் எழுத்து வடிவில் இருப்பதால் பல தலைமுறைகளும் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுகின்றன. அப்படியெனில், எழுத்திற்கு முந்தைய வாழ்க்கைமுறைகள் உருவாக்கிய சம்பிரதாய சடங்குகள் எதுவும் நமது தலைமுறைகளுக்கு கடத்தப்படவில்லையா?
இன்று பல இந்துக் குடும்பங்களில் நிலவும் 'தாய்மாமன் சீர்' (சில பகுதிகளில் வரிசை என்பார்கள்) - என்கிற சம்பிரதாயத்தை எடுத்துக்கொள்வோம். இச்சம்பிரதாயம் தாய்வழி ஆதிப்பழங்குடிகளில், தாய்க்கு அடுத்த அதிகாரம் படைத்த அவளது சகோதரன் (அதாவது தாய் மாமன்) அக்குழுப் பெண்களை பிறகு குழுக்களுடன் பரிவர்த்தனை செய்யவும் குழுவின் பரிசுப் பொருள்களை அப்பரிவர்த்தனையில் வழங்கவும் அதிகாரம் பெற்றிருந்தான். (அச்சமூகத்தில் - 'தந்தை‘ என்கிற ஸ்தானமே அறியப்பட்டிருக்கவில்லை என்பதும் - 'தந்தை' யின் பங்கு தாய்மாமனால் ஈடுசெய்யப்பட்டது என்பதும் மானுடவியலாளர்கள் கூறும் உண்மைகள்) அதன் நீட்சியாகவே இன்று தாய்மாமனின் சீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று யூகிக்க வழியிருப்பின் டாக்டர் அ. சாந்தா அவர்களின் எழுத்துக்கு பிறகான சமூகங்களில் நிலவும் இச்சம்பிரதாயத்தை எப்படி விளக்க முடியும்? எழுத்தற்ற வாய்மொழி இலக்கியங்களாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விழிப்புணர்ச்சியடைந்த நாட்டார் வழக்காற்றியல் (Folklore) சார்ந்த நாட்டுப்பாட்டு, விடுகதைகள், பழமொழிகள் - ஆகியவற்றின்மூலம் இறக்கப்பட்டு பல ஆண்டுகளாய் நடைமுறைக்குள்ளாகி இருக்கும் சம்பிரதாய, சடங்குகளை எப்படி விளங்கிக் கொள்வது? எழுத்தறிவற்ற பல ஆதிவாசிகள் (ஆப்பிரிக்கா, இந்தியா- சிலப்பகுதிகளில்) பல சம்பிரதாயங்களை இன்றும் பின்பற்று வருவதை விளக்க என்ன வழி உள்ளது?
எழுத்து உருவான பிறகு பல சிறு, சிறு குழுக்களாய் இருந்து வந்த கூட்டங்களின் - பண்பாடும், மொழியும் - பரவலாக்கப்பட்டு ஒருங்கிணைந்து ஒரு கலப்புப்பண்பாடு உருவாகி - பண்பாட்டு பொது அமைப்பாக இறுக்கம் பெற்றது என்று யூகிக்க வழிகள் உண்டு. நமது யூகம் சரியெனில், டாக்டர். அ. சாந்தா, கூறுவது போல், பெண் அடிமை என்பது இன்று ஆதிக்கம் செய்து வரும் பண்பாட்டு பொதுமைகளால் வருவதுதான் - என்று கொள்ளலாம். 'பண்பாட்டு நெகிழ்ச்சி'யைப் பற்றி பேசும் அவர் - இந்தப் பண்பாட்டு அமைப்பே
பெண்ணியத்திற்கு எதிர்நிலையில் நிற்பதை ஏனோ விட்டுவிடுகிறார். இந்த விடுபடல் மொழிபற்றிய அவரது புரிதலில் வெளிப்படுகிறது. மொழி என்பது ஒரு பரிமாற்றுக்கருவி என்ற நிலையிலேயே அவரது அளவைகள் (logic) நின்று போகின்றன. மொழியின் செயல்பாடு வெறும் கருத்துப் பரிமாற்றமே என்கிற மரபார்ந்த அணுகு முறைகளால் இன்று மொழி சார்ந்த பலவற்றை விளக்கமுடியாமல் போய் உள்ளதை பற்றிய பல ஆய்வுகளை அவரே கூட அறிந்திருக்கலாம். மொழி 'பெயரிடுதல்' - என்கிற பிரதான பணியாய் ஒழுங்கமைப்பட்ட சப்தமாகத்தான் தனது செயலைத் துவக்குகிறது. வேறொரு சூழலில், அதே பொருள் பெயராக மட்டுமே அறிவிக்கப்படும் போது - ஒரு அரூப நிலையில் கருத்துப்படிமமாக நின்று போகிறது. இந்நிலையில் அப்பொருள் பற்றிய அறிவு என்பது - அதன் பெயர் மற்றும் கருத்துப் படிமம் பற்றிய அறிவாக மாறிப்போகிறது. அப்பொழுது பொருளின் இருப்பு மறுக்கப்பட்டு விடுகிறது. பொருள் பற்றிய பிம்பமும், புனைவுகளும் மட்டுமே மனிதனின் மொழியில் பொருளாக வடிவம் கொள்கின்றன. ஒரு பொருள் பற்றிய நினைவும், சிந்தனையுமே அப்பொருளின் இருப்பாக மாறிப்போகிறது. இங்கு, பொருளைப் புரிந்து கொள்ள பொருள் தேவை இல்லை. அதன் புனைவுகளும் படிமங்களும் கருத்துக்களும் ஆன மொழி மட்டுமே போதுமானதாகிறது.
இப்படியாக மொழிவழிச் சாத்தியப்பட்ட பல குழுக்களின் ஒருங்கிணைப்பு ஒரு பண்பாட்டு பொதுமையை உருவாக்கி - சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் மனிதனை வரையறுத்துள்ளன. இவ்வுரையிலிருந்து ஒவ்வொரு மனிதனும், சக மனிதனை 'மனிதன்' என்கிற பிம்பமாக, ஒரு கருத்தாக மட்டுமே பார்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் கருத்து வடிவங்களாக - உடலற்றுப் போவதால் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் ஆதிக்கத்தின் வன்முறை உணரப்படாமல் போய்விடுகிறது. இங்கு மனிதன் தனக்கு தேவையான இதத்தைப்பெற சக மனிதன் சார்ந்த சமூகத்திற்கு அப்பால் - 'அப்பாலை உலகை' தேடிப்போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மனிதனை உய்விப்பதாக அறிவித்த பெரும்பாலான தத்துவ ஞானங்களும் 'கடந்து செலல்' - எனும் தொழில் நுட்பத்தை முன் வைக்க வேண்டிய தேவை எழுகிறது. இவை இறுதியில் மனித உடலை மொழி வழியாக கரைத்து விட்டு - கருத்து நீதியானவற்றில் சுகம் தேட முனைகின்றன. இத்தேடல் பல நிறுவன வடிவங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வகை நிர்பந்தத்தில் சுகத்தை ஒழுங்கமைக்க பல நிறுவன வடிவங்கள் மனிதனால் கட்டமைத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிறுவன வன்முறைதான் (மதம், சாதி போன்றவற்றின்) மொழியால் மனிதனுக்குள் இதமாக்கப்பட்டுள்ளது. இந்த இதம் வேறொரு புதிய, புரட்சிகர மொழியால் சிதைக்கப்படும்போதுதான் - மனிதன் தனது சுய இருப்பின் அடியில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் உடலின் இருப்பை உணர்கிறான். எனவே, மொழி இன்று தனது பிரதான செயலாக கொண்டியங்கும் 'பிம்ப உருவாக்கம்' என்கிற செயல்பாட்டே இன்றைய சிந்தனைக் குவியங்களுள் முக்கியமானதாக கருதப்படக்கூடியது.
இன்னும் சற்று விரிவாக பார்ப்போமானால், ஒரு முதலாளிக்கும் / தொழிலாளிக்கும் இடையிலான உறவையோ, ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவையோ, இரு நண்பர்களுக்கு இடையிலான உறவையோ - ஆய்வுக்கு உட்படுத்தினால் மொழியின் நுட்பமான செயலை புரிந்துகொள்ள ஏதுவாகும். ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்டால் அது பொருந்திப் போதலாகவே உள்ளது. ஒரு ஆணின் பார்வையில் - பெண் சுயச் சார்பு அற்றவள், நளினம், மென்மை, கற்பு, அடங்கிப்போதல் ஆகியன கொண்டவள். ஒரு பெண்ணின் பார்வையில் - ஆண் சுயசார்பு உள்ளவன், தனித்துவம் மிக்கவன், வீரமானவன், ஆதிக்கம் செய்பவன் - என்பதாக உள்ளது. இவ்விரண்டு பிம்பங்களுக்கும் இடையில் இருவரும் ஒரே மொழியை பகிர்ந்து கொண்டாலும் - அவற்றின் அர்த்தமாக்கலும், உள்ளீடான அர்த்தங்களும் வேறுபட்ட புனைவுகளால் பின்னப்பட்டுள்ளன. இவற்றை அர்த்தமாக்கும் மொழியும் ஆணிலை அடிப்படையிலேயே அமைந்துள்ளதால் - இவை ஆணிலை பிம்பங்களுடன் சுலபமாகப் பொருந்திப் போய் விடுகிற ஒரு உளவியல் பின்னணியை தருகின்றன. ஒரு ஆணுடலுக்கு 'சுகம்' என்பது ஆதிக்கம் செய்வதில் கிடைக்கும் இதமாகவும் - பெண்ணுடலுக்கு ‘அடங்கிப்போவதில்‘ கிடைக்கும் இதமாகவும் உள்ளது. 'சுகம்' என்பதின் அர்த்தமாக்கல் இவ்விரு பிம்ப நிலைகளிலும் வெவ்வேறாக செயல்படுவதையே இவை காட்டுகின்றன.
எனவே, பெண்ணிலையிலான மொழி என்பது இன்னும் உருவாக்கப்படவேயில்லை. இதுவரையிலான எழுத்துக்கள், சரித்திரங்கள், பழங்கதைகள், புனைகதைகள்- எல்லாமே ஆணிலையிலேயே பெண்ணை அணுகி வந்துள்ளன. இன்றைய மொழியின் சாத்தியப்பாட்டிற்குள் இவைமட்டுமே செய்யப்படக்கூடியதாக இருப்பதை பெண்ணிலை நோக்கில் எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் மொழியில் புரிந்து கொள்ளக் கூடியவையே. பெண் எழுத்தாளர்கள் கூட இது வரையில் பெண் என்ற நிலையில் - எதிர் கொள்ளும் உடலியல், உளவியல் பிரச்சனைகள் பற்றி எழுதாததும் - ஆண் பற்றிய புனைவின் வன்முறையை வெளிப்படுத்தாததையும் உதாரணத்திற்கு சுட்டலாம். இரு மனிதர்களுக்கு இடையிலான மொழிப் பரிமாற்றம் என்பது வெறும் பேச்சு, சப்தம், எழுத்து, சைகை என்பதாக மட்டுமே இருப்பதில்லை. இரண்டு பிம்பங்களின் வினையாகத்தான் செயல்படுகிறது என்பதே முக்கியம், ஒருவர் பிம்பத்தை மற்றொருவருக்குள் திணிப்பதும், அல்லது தனது பிம்பத்தையே மற்றொருவராக பார்ப்பதும்தான் மொழியின் முக்கிய வினையாடலாக இருக்கிறது. மொழியும், எழுத்தும் முதலில் உள்ளீடற்ற சப்த ஒழுங்காக உருவாகி, பிறகு அர்த்தங்களால், பிம்பங்களால் புனையப்பட்டு - அதுவே மனிதனின் மீதான அனைத்து ஆதிக்கங்களின் தோற்ற மூலமாகியுள்ளது. டாக்டர். அ. சாந்தா - பெண் அடிமைத்தனம் மட்டுமே மொழியால் சாத்தியப்பட்டுள்ளது என்பதாக கூறும் கருத்து இன்னும் சற்று ஆழந்த அவதானிப்புக்குரியது என்பதுவே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொழி முழுமையாக இன்று ஆணிலையானதாகவே அமைந்துள்ளது - என்பதை நவீன சிந்தனைகளுடன் தொடர்புடைய யாரும் மறுக்க இயலாது. ஆணிலையில் உருவமைக்கப்பட்ட 'பெண் குறித்த பிம்பமே - ஒரு பெண்ணின் தன்னிலையாக (Subject) உருவாகியுள்ளதுதான் - பெண்ணின் மீதான மிகப்பெரும் ஒடுக்கு முறையில் ஒன்று, டாக்டர். அ. சாந்தா சுட்டும் 'பெண்ணின் பலவித குணங்கள் (வடமொழி, தமிழ்நூல்களின் ஆதாரத்துடன்) - இந்தவகை அவதானிப்புக்குரியவை. இப்படியாக, ஆணிலையில் மொழி அமைந்திருப்பதை வெறும் பெண் மீதான ஒடுக்கு முறையாக மட்டுமே பார்க்க முடியாது. மொத்த சமூகத்தின் மனிதனின் அடைமைப்பாடாகவே கொள்ள முடியும். இந்நிலையின் பெண்ணிய நோக்கிலான ஒரு மொழியின் உருவாக்கமே இன்று முற்போக்கான திசைக்கு இட்டுச் செல்லும். அந்நிலையில்தான், ஆணும், தனது உடல்சார்ந்த இருப்பின் - உண்மையான அர்த்தத்தை பெறமுடியும், அதற்கு மொழியின் இறுக்கங்கள், நிலைப்பு, அமைப்பாக்கம் - ஆகியன பற்றியும், அவற்றினை சிதைவாக்கத்திற்கு உட்படுத்துவது பற்றியுமான ஆய்வு அவசியமானது.
தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் பெண் அடிமைத்தனம் நிலை நிறுத்தப்படுவதாக கூறும் டாக்டர். அ. சாந்தா அவர்களின் கருத்தை நாம் மறுப்பதற்கில்லை. இவ்வகைப்பார்வை - அச்சாதனங்களை கருத்துப் பிரச்சாரம் மற்றும் கருத்துத் திணிப்பு செய்யக் கூடியவை என்கிற ரீதியில் மட்டுமே பார்க்கிறது. அதற்கும் மேலாக 'பெண்' என்ற ஆணிலையில் உருவமைக்கப்பட்ட பிம்பங்களை மறு உருவாக்கம் செய்வதும் பரவலாக்குவதும் - இறுகச் செய்வதும் இச்சாதனங்கள்தான். இவை - பெண்ணை உருவாக்குவதில் உளவியல் தளத்தில் நுட்பமான தாக்கத்தை செய்கின்றன. இவை சமூகத்தில் புழங்கி வரும் ஆணாதிக்க மொழியை அங்கீகரித்து இயல்பாக்கி - அவற்றின் அர்த்தத்தை உறையச் செய்வதில் முக்கிய பணியாற்றுகின்றன. இச்சாதனங்களை - பயன்படுத்துவோரின் கைமாறினால் அவற்றின் உள்ளடக்கமும் மாறும் என்பதாக 'ரெய்மாண்ட் வில்லியம்ஸ்'ஐச் சுட்டிக் காட்டி டாக்டர் அ. சாந்தா கூறுகிறார். இன்று முற்போக்கான சில கருத்துக்களைக் கொண்டு வெளிப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பத்திரிக்கைகள் ஆகியவை - ஏன் பரவலான வெற்றியைப் பெற முடியவில்லை? ஒரு பொருளை உற்பத்தி செய்து வெளிப்படுத்துவதால் மட்டுமே அப்பொருளுக்கான நுகர்வு அமைப்பை உருவாக்கிவிட முடியாது. அப்பொருளுக்கான உற்பத்தி நிலைமை அல்லது அதை நுகரும் சூழலையும் உருவாக்க வேண்டும் - என்பது அடிப்படையான விஷயம். இங்கு நுகரும் சூழல் என்பதை - நாம் உருவாக்கும் படைப்பை, கருத்தை மொழி ரீதியான அர்த்தமாக்கல் என்றும் கொள்ளலாம், இந்த அர்த்தமாக்கும் நிலைமையை உருவாக்கினோமா? எனபது கேள்விக்குரியதே.
இன்று, தகவல் தொடர்பு சாதனங்கள் வலைப்பின்னலாக அமைந்து திரும்பத் திரும்ப ஒன்றையே கூறி குறிகளின் ஆதிக்கத்தையும், ஒரு வித அர்த்தப்படுத்தலையும் உருவாக்கி உள்ளன. இதை வெறும் ஊடகமாகப் பார்க்க முடியுமா? இன்றைய மொழியே ஆணிலையானதாக இருக்கும்போது - இந்த ஊடகங்களைக் கைப்பற்றி பெண்ணிய கருத்தைக் கொண்டு செல்வது சாத்தியமா? நமது கருத்தைக்கூட நாம் கையாளும் மொழி - இதே ஆணிலை மொழியாக இருக்கும் போது அவற்றை எதிர்க்கொள்ளும் வாசகத்தளம் - எப்படி பெண்ணிலையில் அவற்றைப் புரிந்து கொள்ளும்? எனவே, தகவல் தொடர்பு என்பதின் மூலமான மொழிச்செயல்பாடு ஒழுங்கமைக்கப்பட்ட ஆணிலையான கண்ணோட்டத்திலேயே உருவாகியுள்ளதுதான் - இவற்றின் வடிவம், செயல்பாடு, உள்ளடக்கம், முழுமையும் அலசலுக்கு உட்படுத்தப்பட்டு - மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவையாக உள்ளது.
அடுத்து, ஒரு பெண் - கணவன் இறந்த பின்னும் - பொட்டிடல், பூவை
த்தல் வண்ணத் துணியணிதல் - என்கிற ‘முற்போக்கான முடிவை‘ (?) சுயசிந்தனையில் எடுக்கவில்லை - என்கிற ஒரு சம்பவம் டாக்டர் அ. சாந்தாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேமுடிவை சுயசிந்தனையில் எடுத்திருப்பினும் கூட பெண்ணியம் பற்றிய அடிப்படையான விஷயங்களுக்கும் அவற்றிற்கும் என்ன உறவு என்பது கேள்விக்குரிய விஷயமே. போகட்டும், இந்த வகை முடிவுகளை 'முற்போக்கானது' என்றே கொள்வோம். இங்கு அரேபிய நாட்டுப் பெண்கள் பற்றிப் பேசுவது இன்னும் கொஞ்சம் இந்த வகை முற்போக்குகளை விளக்கிக் கொள்ள ஏதுவாகும்.
ஒரு பெண் தனது முகத்தை வெளியில் காட்டவே தடை செய்யப்பட்டுள்ள அரேபிய நாடுகளில் (குறிப்பாய் சவுதி அரேபியாவில்) - விதவைகளுக்கும் என்று தனிப்பட்ட அடையாளங்கள் இல்லை. வரதட்சிணை இல்லை. ஆண்கள் தான் லட்சக்கணக்கில் பணம், நகை, வீடு எனக் கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும். இங்கு கணவன் பெண்டாட்டி சொற்படிதான் வாழ்கிறான். (அதாவது டாக்டர். அ. சாந்தா சுட்டிக்காட்டிய 'பெண்டாட்டிதாசர்களாக') விவாகரத்து (தலாக்), மறுமணம் - என்பது மிகச் சாதாரண விஷயம், இவற்றை வைத்து அரேபியாவில் 'பெண் சமத்துவம்' - நிலவுவதாக கூறிவிட முடியுமா? மிகக் கடுமையான பெண் ஒடுக்குமுறை இங்குதான் உள்ளது. வீட்டுக்குள் பெண்களை வைத்துப் பூட்டுவதும், அந்நியருடன் பேசத்தடையும், தலை முதல் கால் வரை 'அபயா' - எனப்படும் கருப்புத் துணியாலான உடையில் மூடி மறைத்துக் கொள்வதும் இங்கு கட்டாயமாக உள்ளது. ஒரு பெண்ணைக் கணவன், தந்தை, சகோதரன் தவிர்த்து பிற ஆண்கள் பார்பதைத் தவறு என்கிறது இஸ்லாமிய மதம். இங்கு பெண்கள் - பிள்ளை உற்பவிக்கும் எந்திரமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். ஆண் 4 பெண்கள் வரையும் (அரசு குடுபத்திற்கு இந்த எண்ணிக்கை கிடையாது) திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி உண்டு. எந்த நாட்டிலாவது 1 பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டா?
(பெண் பிம்பத்தில் - உள்ளிருத்தப்பட்டிருக்கும், 'கற்பு' - என்கிற கருத்து யாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்? எதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும்? - என்பது இங்கு சிந்திக்க வேண்டிய புள்ளிகள்).
இந்நாடுகளில் அழகு சாதன்ப் பொருட்களுக்கு (குறிப்பாய் பெண்களுக்கானவை) தரப்படும் முக்கியத்துவம், விளம்பரம், விற்
பனை - இச்சமூகங்களை மிகப்பயங்கரமாக ஆக்ரமித்துள்ளன. உலகில் தயாராகும் அனைத்துவகை அழகுசாதன்ப் பொருட்களும் - பெருமளவில் இங்குதான் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்கள் மட்டுமே பார்க்க, பேச அனுமதிக்கப்பட்டுள்ள இப்பெண்கள் - ஏன் பெருமளவில் இவற்றை நாடிச் செல்கின்றனர்? பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளை, வேட்கைகளை - இயல்பாக்கம் செய்ய இந்தப் பொருட்களும் இவற்றின் வழி உருவாகும் பிம்பங்களும், கனவுகளும் - தரும் இதம் அரேபியப் பெண்களுக்கு தேவைப்படுகிறது. பெண் உடலின் சுய ஆற்றலை இப்பொருட்களின் பயன்பாட்டால் பதிலீடு செய்து மொண்ணையாக்கிட- இவற்றின் பரவலாக்கமும், கவர்ச்சிகரமான விளம்பரமும், போட்டியும் தேவைப்படுகிறது. அரேபிய சந்தையில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள இப்பொருள்களே - இப்பெண்களின் நுகர்வு, வழியாக - ஆற்றலை அழித்துக் கொண்டு உள்ளன. இவர்களுக்கு சுயசிந்தனை இல்லையா? உண்டு - அவர்கள் தேர்ந்தெடுக்கும் 'லிப்ஸ்' டிக்கின் நிறம், 'ஹேர்ரிமூவ'ரின் தொழில் நுட்பம், 'மேக்கப்கிட்'டின் டிசைன்., 'ஆயின்மெண்ட்'களின் தரம் ஆகியவற்றில் உண்டு. இவர்கள் ஏன் சுயமாக சிந்திக்க இயலவில்லை- அதற்கான பலகாரணங்களின் ஒன்றாக டாக்டர் ஆ. சாந்தா கூறும் இரண்டு காரணங்களையும் விரிந்த தளத்தில் கொள்ளலாம்.
1. மொழி அரேபிய மொழி புனிதமாகவும், முதன்மையானதாகவும் கருத்தப்படுவதால் - அம்மொழியில் உடைசள்கள், மாற்றங்கள் செய்ய சாத்தியமில்ல. சட்ட அனுமதியும் இல்லை. அம்மொழியின் செயல்பாடு அங்கீகரிக்கப்பட்ட மத அர்த்தப்படுத்தலையே செய்து கொண்டு உள்ளன. இங்கு மதமும், மொழியும் ஒன்றாகவே செயல்படுகின்றன.
2. தகவல் தொடர்பு சாதனம் டிவி, நேடியோ, பத்திரிக்கை - (அரேபியாவில் சினிமா இல்லை, எடுக்க அனுமதியும் இல்லை) - ஆகிய அனைத்தும் மதப் பிரச்சாரத்திற்கு முதன்மை முக்கியத்துவமும், விளையாட்டு, விளம்பரம், மதரீயான நாடகங்கள்- ஆகியனவற்றிற்கு அடுத்த நிலையும் தந்து ஒளிபரப்பப்ப்படுகின்றன. அந்நிய நாட்டுப்படங்கள், பத்திரிக்கைகள், மதக்குறியீடுகள் கடுமையான தனிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச சுதந்திரச் சூழலான - மக்கள் கலந்து கொள்ளக்கூடிய பண்பாட்டு, கலைவிழாக்கள் எதுவும் கிடையாது. இங்கு ஆண்களே அதிகாரத்தில் இருப்பினும் - வரையறுக்கப்பட்ட மதபிம்பங்களை அணிந்து வளரும்போது- பெண்கள் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.
மீண்டும் பெண்ணின் சுயசிந்தனைக்கு வருவோம் இதிலும் நாம் எதிர்கொள்வது மொழியே. ஒரு பெண் சுயமாக சிந்திப்பது என்றால் எதை அடிப்படியாகக் கொண்டு சிந்திப்பது? அப்பெண்ணின் சுயமே (Self). ஆணால் உருவாக்கப்பட்டிருக்கையில் அல்லது ஆணை மையமாக வைத்து உருவமைக்கப்பட்டிருக்கையில் - சுயசிந்தனை என்பது சாத்தியமா? அப்படியும் இன்றைய ஆணிய மொழியைக் கொண்டு ஒரு பெண் சிந்தித்தால் - பெண்ணிலையில் முடிவு எடுப்பது சாத்தியமா? - அடிப்படையில் இப்பிரச்சனைகளில் எதிர்கொள்வது இன்றைய மொழியில் உருவமைக்கப்பட்ட 'பெண்' பற்றிய பிம்பங்கள் முழுமையாக சிதைந்து ஒரு புதிய 'பெண்' பற்றிய கருத்தாக்கத்தை கட்டமைப்பதும் அல்லது பெண் - என்ற உடலின் இயல்புகளை, ஆற்றலைக் கண்டு அவற்றின் அடிப்படையில் ஒரு புதிய வரையறையைச் செய்வதும் அவசியமானது என்பது தான்.
'பெண் விடுதலை' - என்ற பெயரில் இணை ஆண் பிம்பத்தை அடைவதையோ? அல்லது இயங்கி வரும் பெண் பிம்பத்தை சரிசெய்து சில முற்போக்கானவற்றை இணைத்துக் கொள்வதிலோ பெண்ணியம் சாத்தியமாகிவிடுமா? நாம் கேட்பதெல்லாம் 'பெண்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன? அல்லது ஆண் சார்பற்ற - 'பெண்' என்பதற்கான வரையறையும், கருத்தாக்கமும் என்ன? அவை எவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்? பெண்ணியத்திற்கும் - பாலியலுக்கும் இடையிலான உறவு என்ன? பெண்ணிய பாலியல் (Feminine Sexuality) சாத்தியமா? என்பது இந்த வகை உரையாடலை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்ல ஏதுவாகும்.
இறுதியாய் பாலியல் பற்றிப் பேசாத பெண்ணிய எழுத்து சாத்தியமா? டாக்டர் அ. சாந்தா அவர்கள் முழுமையாக அதைத் தொடாது விட்டு விட்டார் - (முழுமையாக பெண்ணியத்தின் பல கூறுகளை அக்கட்டுரையில் பேசுவது - ஏற்றுக்கொண்ட பணிக்கு வெளியே போய்விடும் என்பதால் விட்டிருக்கலாம்) என்பதால் பாலியல் - பெண் உடல் தொடர்புள்ள சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி முடிக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு 'அராப் நியூஸ்' (Arab News) - பத்திரிக்கையில் அதிர்ச்சி ஊட்டக்கூடிய ஒரு செய்தி வெளிவந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவம் பிலிப்பைன் நாட்டைக் கைப்பற்றி அங்கு 9 மாத காலம் முகாமிட்டிருந்தது. இராணுவத்தினரின் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்காக - ஜப்பானிய அரசு ஒரு லட்சத்திற்கும் மேலான பிலிப்பைன், சீன, கொரிய - பெண்களை வேலைக்கு அமர்த்தியது. 'வேட்கை தணிப்பு பெண்களாக‘ (Comport women). இராணுவத்தினர் முகாமிட்டிருந்த ஊர்களில் அப்பெண்கள் சில இடங்களில் தேர்ந்தெடுத்து அடைத்து வைக்கப்பட்டனர். தினமும் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் வேட்கையைத் தணிவிப்பது தான் அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருந்த வேலை. மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வரிசையாக இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள். அந்தப் பெண்கள் அறைகளைவிட்டு வெளியில்வர அனுமதியில்லை. கடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அப்பெண்களில் தற்பொழுது 65 வயதாகும் - 'மரியா ரோஸா லுனா ஹான்சன்' - கூறுகிறார், "நாங்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்டோம். அத்தருணங்களில் என்னைக் கல்லாக உணர்ந்தேன் பேசாமல் கண்களை மூடிக்கிடப்பேன்".
அப்பெண்கள் நிறையபேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகியும், இறந்தும் - வாழலாயக்கற்று சீரழிக்கப்பட்டனர். அவர்களில் உயிருடன் உள்ள ஒரு சிலரைத்திரட்டி இச்செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டு சம்பந்தப்பட்ட அரசுகள் மீது வழக்கு தொடுத்துள்ளனர் சில தீவிர பெண்ணியலாளர்கள் (Radical Feminist) என்ற போதிலும், 'பெண்' உடலின் பாலியல் பற்றிய பிம்பத்திற்கும், ஆணின் வேட்கையின் தரத்திற்கும் அதிகாரத்துவம் தந்துள்ள அர்த்தமும். 'பெண்' பற்றிய அதிகாரத்துவத்தின் வரையறையும் தவிர இச்சம்பவம் வேறு எதைக் குறிக்கிறது?
ஜமாலன். (மேலும் - டிசம்பர் – 1993).






